தகுதி தேர்வில் தவறான விடைகளுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், பதில் மனு தாக்கல் செய்யும்படி ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டம், முட்டவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் எம்.யுவராஜ் (வயது 24). இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
தவறான விடை
நான் கணிதம் பாடத்தில் பி.எஸ்சி., பி.எட். பட்டம் பெற்றுள்ளேன். ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆகஸ்ட் 18–ந் தேதி நடத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் கலந்துக் கொண்டேன்.
இந்த தேர்வு முடிவினை 5–11–2013 அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அதில், நான் 89 மதிப்பெண் பெற்று இருந்தேன். ஆனால், தேர்வில் தேர்ச்சி பெற 90 மதிப்பெண்கள் எடுக்கவேண்டும்.
அதேநேரம், தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு சரியான விடை பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில், கேள்வி எண் 4, 14, 24 ஆகிய கேள்விகளுக்கு தவறான விடைகளுக்கு மதிப்பெண் வழங்கியுள்ளது.
3 மதிப்பெண்கள்
நான், இந்த 3 கேள்விகளுக்கும் சரியான விடை அளித்துள்ளேன். இதையடுத்து, 6–11–2013 அன்று இந்த 3 கேள்விக்குரிய சரியான விடைகளையும், அதற்கான ஆதார புத்தகங்களையும் இணைத்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு அனுப்பினேன். இதுவரை எந்த பதிலும் இல்லை.
இந்த தேர்வு முடிவின் அடிப்படையில், தேர்ச்சிப் பெற்றவர்களின் சான்றிதழ் சரி பார்க்கும் பணி விரைவில் நடைபெற உள்ளது. எனவே சரியான பதிலை அளித்துள்ள எனக்கு 3 மதிப்பெண்கள் வழங்கவும், சான்றிதழ் சரி பார்க்கும் பணியில் கலந்துக்கொள்ள எனக்கு அழைப்பு கடிதம் அனுப்பவும் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
அனுமதிக்க வேண்டும்
இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வக்கீல் எம்.ஆர்.ஜோதிமணி ஆஜராகி வாதம் செய்தார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவில், ‘‘இந்த வழக்கில் ஆசிரியர் தேர்வு வாரியம் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும். விரைவில் நடைபெற உள்ள, சான்றிதழ் சரி பார்க்கும் பணியில் மனுதாரரையும் கலந்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும். இந்த மனு மீதான விசாரணை வருகிற 20–ந் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது’’ என்று கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக